செவ்வாய், மே 08, 2012

வெட்கமில்லை,வெட்கமில்லை,வெட்கமென்பதில்லையே.



நேற்று தேசத்தின் உயரிய அமைப்பான நாடாளுமன்றத்தில் அரசாங்கமே ஒப்புக்கொண்ட ஒரு செய்தி.
 அற்ப கடன் தொகைக்கு ஆசைப்பட்டு விளைபொருளை விளைவித்துவிட்டு கடனை அடைக்கமுடியாமல் தன் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள் ஒரு பக்கம்.
அத்தகைய விவசாயிகள் உற்பத்திசெய்த நெல், கோதுமை போன்ற விளைபொருட்களை வாங்கிய அரசாங்கம் அவற்றை வீதிகளில் கொட்டிவைத்து வீணாகி வருகிறதென்பதுதான்அரசாங்கமே ஒப்புக்கொண்ட அந்த செய்தி.
அதற்கு அரசாங்கம் கூறும் காரணம் கிட்டங்கிகள் இல்லை.போதிய வசதிகள் இல்லை.
அதற்கும் மேலாக, இந்த இந்திய திருநாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் கூறும் இன்னொரு காரணம் விளைபொருளை போட்டுவைக்க சாக்கு பை இல்லை என்பதை தெரிவித்ததை எண்ணி வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.

வல்லரசாக போவதாக துடிக்கின்ற இந்தியாவில் ,நினைத்தால் அணுகுண்டுசோதனை நடத்தும் வசதியுள்ள இந்தியாவில், கீழே விழுந்தாலும் மீண்டும் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பத்துடிக்கும் இந்தியாவில், விரல் விட்டு எண்ணக்கூடிய நீண்டதூர ஏவுகணை வைத்துள்ள நாடுகள் பட்டியலில் சேர்ந்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவில், விவசாயி விளைவித்த விளைபொருளை பிடித்துவைக்க சாக்குபை இருப்புஇல்லை என்று கூறும் என் இந்தியாவை நினைத்து வேதனையை தவிர வேறு எந்த உணர்வை நான் அடையமுடியும்.