ஞாயிறு, ஜூன் 17, 2007

கசக்கும் கரும்பு

அனைவருக்கும் இனிக்கும் கரும்பு விவசாயிகளை பொறுத்தவரை இவ்வருடம் கசக்கவே செய்கிறது.பருத்திக்கு பிறகு விவசாயிகளை வாட்டும் கரும்பு பயிர்.ஆம் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடைந்து தற்கொலைசெய்துகொள்ளும் விவசாயிகளின் வரிசையில் கரும்பு பயிரும் அத்தகைய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும், தள்ளிவிட்ட பரிதாபம் தொடர்கதையாகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்னாடகா,இன்னும் தமிழகத்திலும் இவ்வருடம் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நிலை இதுதான்.என்ன காரணம்? மற்ற பயிர்களை விட நிலையான வருமானம் வரும் என நம்பி பெரும்பான்மையான விவசாயிகள் நாடு முழுவதும் கரும்பு பயிரிட்டதில் அனைத்தையும் அறவை செய்யும் திறனற்ற ஆலைகள் 12 மாதத்தில் அறுவடை செய்யவேண்டிய கரும்பிற்கு 15,16 மாதங்களில் அனைத்தும் காய்ந்துவிட்ட பின் உத்தரவு வழங்கும் நிலை.

சென்ற வருடத்தைவிட ஆட்கள் பற்றாகுறை, கூலியோ 200%முதல்300% வரை சென்ற வருடத்தைவிட உயர்வு.வேறு வழியற்று கரும்பை தீயிட்டு அழிக்கும் அவலம்.இதுதான் இன்றைய கரும்பு விவசாயிகளின் நிலை.

சரி,இத்தகைய அவல நிலைக்கு தீர்வு காண அரசோ, அரசியல் கட்சிகளோ ஏதாவது செய்தார்களா?ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடபட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்?என்ன செய்தது அரசு?இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?

சனி, ஏப்ரல் 28, 2007

நன்றி

வேளாண் துறையை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்த மாண்புமிகு. குடியரசு தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.இப்பொறுப்பின் மூலம் விவசாயிகளின் வேதனைகளை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விவசாயிகளின் வாழ்வு வளம் பெற ஆவன செய்யவேண்டுமென்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்பிக்கை கொள்வோம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

நாடித்துடிப்பு

எனது கிராமத்திலேயே ஆரம்ப பள்ளியில் படிக்கும் எனது மகனை எனது மாவட்ட தலைநகரில் உள்ள மேல் நிலை பள்ளியொன்றில் சேர்க்க கடந்த இரு ஆண்டுகளாக முயன்று வருகிறேன்.இந்த வருடமும் முயற்சி செய்துள்ளேன்.இந்த பள்ளி பொதுவாக வியாபார நோக்கமற்ற,தேவையற்ற கட்டணங்களை சுமத்தாத,நல்ல பள்ளி.

நான் முயற்சி செய்த இரு வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்.

இப்பள்ளி முதல்வரை பலமுறை சந்தித்து உள்ளேன்.நான் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது தவறாமல் வணக்கம் தெரிவித்தும் ஒரு முறை கூட தப்பிதவறி கூட பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.இதற்கு எனது எளிமையான கிராமத்து தோற்றம் காரணம் என்பதை அவருக்கு அறிமுகமான ஒருவருடன் சேர்ந்து சந்திக்கும் போது அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகள் தெளிவாக காட்டின.

மேலும் கிராமத்தில் படிக்கும் மாணவர்களிடம் போதுமான திறமை இருக்காது என்று இடமின்மைக்கு காரணம் கூறினார்.சிலமுறை குறிப்பிட்ட தேதியில் சந்திக்குமாறு கூறினார்.சந்திக்கும் போது சேர்க்கை முடிந்து விட்டதாக தெரிவித்தார்.

இப்பள்ளி அலுவலகத்திலும் சில ஊழியர்கள் ஏதாவது தகவல்கள் கேட்கும்போது பெற்றோர்களை விரட்டாத குறையாக பதில் அளித்ததையும் பார்த்திருக்கிறேன்.பொறுமையாக தெளிவாக பதில் வழங்கிய ஒரு சிலரும் காணப்பட்டது மகிழ்சியாக இருந்தது.மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு எழுதிவிட்டு வருகின்ற பிள்ளைகளை ஆவலோடு எதிர்பார்த்து கூட்டமாக கூடியுள்ள பெற்றோர்களை பள்ளி காவலர் தூர போகும் படி துரத்தியதையும் பார்த்தேன்.இறுதியாக தெரிந்தவர்களின் சிபாரிசு இல்லையென்றால் இங்கு இடமில்லை என்பது இரண்டுவருடத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

கிராமத்தில் வசித்து விவசாயம் செய்பவருக்கு பெண் கிடைப்பது இப்பொழுது எவ்வளவு கடினம் என்பதை கிராமத்தில் வசிப்பதால் உணர முடிகிறது.அந்த வகையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைப்பது கூட கேள்விக்குரியதாகி விட்டது.கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாம்.விவசாயம் உயிர் நாடியாம்.முதுகெலும்பு ஒடிந்துவருவதும் நாடித்துடிப்பு குறைந்துவருவதும் நாட்டை ஆளும் மருத்துவர்களால் உணரமுடியாமல் உள்ளது நாட்டுக்கே ஆபத்து.உணர்வார்களா?

புதன், ஜனவரி 17, 2007

ஆக்கலும் அழித்தலும்.

எங்கள் கிராமத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள சங்கமாக பல ஆண்டுகள் சேவைபுரிந்து வந்த சங்கம்தான் எண்ணைவித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.விவசாயிகளின் முன்னேற்றத்துக்கான தேசிய பால்வள வாரியத்தின் மற்றொரு புரட்சி திட்டம்.

இச்சங்கம் எங்கள் கிராமத்தை சேர்ந்த இவ்விரு இளைஞர்களின் முழு முயற்சியாலும் தன்னலமற்ற சேவையாலும் தொடங்கப்பட்டு இவர்களின் நிர்வாகத்தால் சிறப்பாக இயங்கி வந்தது.இதன் வளர்ச்சிக்கு இவர்கள் பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.

இச்சங்கத்திற்க்கு சுமார்10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள கட்டிடம் கட்ட இவர்கள் பாடுபட்டதும் அச்சமயத்தில் குறிப்பிட்ட கட்டிட வரைபடத்தை ஒதுக்கி இதே தொகையில் இக்கட்டிடத்தை சேர்ந்தார்போல் ஒரு அலுவலக கட்டிடமும் கட்டினால் மிகவும் உபயோகமாய் இருக்கும் என நினைத்து அதிகாரிகளின் மிரட்டலுக்கும் பயப்படாமல் அவ்வாறே கட்டிடம் கட்ட பாடுபட்டதும் அதை பார்வையிட்ட உயரதிகாரிகள் இக்கட்டிட மாதிரி மிக சிறப்பாக உள்ளதால் இனிமேல் இதையே பயன்படுத்தலாம் என சான்று வழங்கியதும் இன்றும் பசுமையாய் மனதில் உள்ளது.

இச்சங்கத்தின் காரணமாக விவசாயிகளுக்கு பல பயன்கள் விளைந்தன.

1.மணிலா போன்ற எண்ணை வித்துக்கள் பயிரிடும் பரப்பு அதிகரித்தது.

2.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களும் இருக்கும் இடத்திலேயே கிட்டியது.

3.தரமான விதை,இடுபொருள்கள் சரியான நேரத்தில் கிடைத்தது.

4.மிகமுக்கியமாக ஊருக்குள் வந்த இடைத்தரகர்களும்,வியாபாரிகளும் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

5.அனைத்தையும் விட முக்கியமாக விவசாயிகள் உற்பத்தி செய்த எண்ணைவித்து பொருள்கள் அவர்களின் இருப்பிடம் சென்று கொள்முதல் செய்யப்பட்டது.அதற்கான விலை அப்பொழுதே வழங்கப்பட்டது.இப்படி இன்னும் பல.இவற்றிற்கு மிக்க உறுதுணையாய் இருந்தது இந்த இளைஞர்களின் தியாகம்.

ஆனால் இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களை வளர விடாமல் இதன் நிர்வாகத்தை நள்ளிரவில் கலைத்து வேட்டு வைத்தது அரசாங்கம் பல முறை.

காலம் செல்ல செல்ல இதுபோன்ற விவசாயிகளின் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் இன்று முழுக்க அழிக்கப்பட்டுவிட்டன.

விளைவு இன்று எங்கள் பகுதி விவசாயிகள் எண்ணைவித்து பயிரிடுவதை முற்றிலுமாக கைவிட்டனர்.அரசாங்கம் தன் சொந்த விவசாயிகளை வாழவைப்பதை விடுத்து இன்று தேவைக்கான உணவு எண்ணையை பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.இதற்கான உண்மையான காரணத்தை அரசியல்வாதிகளின் மனசாட்சிதான் சொல்லமுடியும்.

இந்த இரு இளைஞர்களின் நம்பிக்கையோடும் கடின உழைப்பினாலும் உருவான இந்த(கேட்பாரற்று மேலே மெல்ல மெல்ல தலைகாட்டும் சிறு செடிகள்முளைத்துள்ள) சங்க கட்டிடத்தை தாண்டி செல்லும் போதெல்லாம் இதன் இந்நிலைக்கு காரணமான அரசின் விவசாய விரோத கொள்கைகளை எண்ணி வேதனை கொள்ளத்தான் முடிகிறது.

செவ்வாய், ஜனவரி 16, 2007

மாட்டுப்பொங்கல்

இன்று மாட்டுப்பொங்கல்.முன்பெல்லாம் உழவு மாடுகளும்,வண்டிமாடுகளும்,கறவை மாடுகளும் இல்லாத விவசாயின் வீட்டை காணமுடியாது.எங்கள் வீட்டிலும் 10 பசுமாடுகளும் ஒவ்வொரு ஜதை உழவு மற்றும் வண்டி(டயர் வண்டி)மாடுகளும்,சுமார் 25 எருமை மாடுகளும் நிறைந்திருந்தன.

மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரே களை கட்டிவிடும்.டயர் வண்டிக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி,மாடுகளுக்கு கொம்பு சீவி,புது கயிறு கட்டி,சலங்கை கட்டி,மாடுகளை அழகுபடுத்துவதே ஒரு கலையாகிவிடும்.

இன்றைய நாளில் அனைவரின் வண்டிகளும் சிறுவர் சிறுமியர் புடைசூழ மந்தைவெளிக்கு புறப்பட்டு சென்று சாமி கும்பிட்டபின் ஊர்வலம் வரும்.எந்த வண்டி சீக்கிரம் வரும் என்பதில் போட்டியும் நிலவும்.

இன்று வண்டியும்,வண்டிமாடுகளூம்,உழவு மாடுகளும் ,கறவை மாடுகளும் உள்ள விவசாயிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்றைக்கும் இந்த விழா நடைபெற்றாலும் வண்டியும் வண்டிமாடுகளும்,உழவுமாடுகளும்,கறவைமாடுகளும் நிறைந்து இயற்கையோடு இணைந்து பயிரிட்டதால் விவசாயியின் மனமும் நிறைந்து மகிழ்ச்சியும் நிறைந்திருந்த சூழல் இன்று இல்லையென்பதே உண்மை.

திங்கள், ஜனவரி 15, 2007

பொங்கல் வாழ்த்து.

தமிழ் வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்்் நல்வாழ்த்துக்கள்

புதன், ஜனவரி 03, 2007

பாதுகாப்பு?

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை தங்களின் நிலத்துக்கு சென்ற விவசாயிகள் பலருக்கு சோகமான அனுபவம் கிட்டியது.தங்கள் மின் மோட்டாருக்கு மின்சார இணைப்பு வழங்க பயன்படுத்திய காப்பர் ஒயர் (சுமார் ரூ1500 பெறுமானமுள்ளது )திருடர்களால் களவாடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.சுமார் பத்து விவசாயிகளின் மின் இணைப்பு ஒயர்கள் ஒரே நாளில் இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.

பல கிராமங்களில் இவ்வாறான திருட்டு நடைபெறுவதை பத்திரிக்கைகளில் காண்கிறேன்.நானும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தருமாறு கேட்டுக்கொண்டாலும் விவசாயிகள் யாரும் இதை விரும்பாததுதான் இன்றைய நிலை.

இவ்வாறு இழப்புக்குள்ளான விவசாயிகள் தற்போது சற்றே விலை குறைவான அலுமினிய ஒயரை புதிதாக வாங்கி மாற்றியுள்ளார்கள்.இதில் கவலைப்படும் அம்சம் என்னவெனில் புதிய ஒயரை வாங்க பணமில்லாது கடன் பெற்று வாங்கிய ஒயருடன் தனது மிதிவண்டியில் இன்று சென்ற 70 வயது முதிய விவசாயியை கண்டதுதான் இப்பதிவு.

பொழுது போக்கு அம்சமான திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு வரக்கூடாது என்பதற்காக திருட்டு விசிடி யை ஒழிக்க காவல்துறையில் தனிப்படை.அதற்கும் மேல் குண்டர்சட்டம் போன்ற பாதுகாப்பு . விவசாயிகளுக்கு?