புதன், ஜூலை 01, 2015

டிஜிட்டல் இந்தியா-பிரதமரின் கனவுத்திட்டம்

இன்றுமாண்புமிகு  பாரத பிரதமர் மோடி தன் அரசின் கனவுத்திட்டமான ’டிஜிட்டல் இந்தியா’திட்டத்தை துவக்கிவைத்தார்.இது நிச்சயம் ஒரு டிஜிட்டல் புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏராளமான பயன்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.குக்கிராமங்களுக்கும் அதிவேக இணைய இணைப்பு,மாணவர்களுக்கு பாடங்களை டிஜிட்டல் மூலம் வழங்குதல்,அரசு சேவைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக வழங்குதல்,அனைத்திற்கும் மேலாக டிஜிட்டல் லாக்கர் மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்து தேவையான போது அப்படியே அதனை பயன்படுத்திக்கொள்ளும் வசதி போன்ற எண்ணற்ற வசதிகள் அளிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனவும் தெரிகிறது.நிச்சயம் இது போன்ற திட்டங்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த பாடுபடும் பிரதமருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்போம்.


திங்கள், ஜூன் 15, 2015

’வெற்றி’ச் செய்தி

இந்த மாதம் என் மகனின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கப்படவேண்டியிருந்தது.ஆன் - லைன் மூலம் புதுப்பிக்கலாம் என ஓரளவு தெரிந்திருந்தாலும் அரசு சேவைகள் ஆன் - லைன் மூலம் பெறுவதில் பல இன்னல்கள் இருப்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

 இன்று எப்படியும் ஆன் -லைனில் பதிவை புதுப்பித்து விடுவோம் என நினைத்து  வேலைவாய்ப்பு இணையதளத்தில் நுழைய சற்றே சிரமப்பட்டாலும் வெற்றிகரமாக சுமார் 10 நிமிடத்திற்குள் பதிவை புதுப்பித்து பிரிண்ட் அவுட்- டும் எடுத்து முடித்தேன்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கு பட்ட சிரமங்களோடு ஒப்பிடும் போது இப்பொழுது மிக மிக சிறந்த முன்னேற்றம் ஏற்பட காரணமான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை அனுபவிக்கும் இந்த தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள்தான்.

இந்த வளர்ச்சியை சரியான முறையில் பொதுமக்களுக்கு கொண்டுசேர்க்கும் அரசுக்கும்,சிறந்த சேவை அளிக்கும் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும் என் நன்றியும் பாராட்டுக்களும்..

ஞாயிறு, ஜூன் 14, 2015

’தலை’யானபிரச்னை

இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது பற்றி ,
மாண்புமிகு உயர்நீதிமன்றம் தலைகவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளது.விபத்தின்போது தலைக்கவசம் ஓட்டுனரை விபத்திலிருந்து பாதுகாக்கிறது என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் உயிரை பாதுகாக்கவேண்டும் என்பதைபொறுத்து இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியதே.

ஆனால் என்னுள் எழும் சில  கேள்விகள்.

1)மது அருந்துவது உடல் நலத்துக்கு தீங்கானது உண்மையெனில் ஏன் அரசே
” டாஸ்மாக்” திறந்து பொதுமக்களுக்கு தீங்கான விஷயத்தை அளிக்க வேண்டும்.
2)இருசக்கர வாகனத்தில் இருவருக்குமேல் செல்லக்கூடாது.சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் 55 பேர் பயணம் செய்ய கூடிய பேரூந்தில்  அதற்கு மேலும் பயணம் செய்வது நாம் தினசரி பார்க்கும் நிகழ்வுதானே? இது ஆபத்தில்லையா?

பொதுவாக விபத்து நிகழும் காரணிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும். அரசு இவற்றிக்குதான் ’தலைகவச’த்தை விட முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதே என் கருத்து.அத்தகைய காரணிகளில் முக்கியமானவைகள்,

1)நல்ல பயணத்துக்கு முக்கியமானது சாலைகளே, பயணிக்க லாயக்கற்ற பழுதடைந்த சாலைகளை உடனுக்குடன் சீர்செய்வது.

2) சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது ,ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது,கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது,சாலை விதிகளைபற்றி கவலைப்படாது வாகனம் ஓட்டுவது போன்றவற்றை கடுமையான சட்டங்கள் மூலம் முழுமையாக தடுத்தாலே விபத்துக்கள் நிச்சயம் தவிர்க்கப்படும்.

3)அனைத்திற்கும் மேலாக குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கடுமையான குற்றமாக்கி தடுத்து விட்டாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுவிடும்.
 இவைகள் நிறைவேறும் காலம் கனியும் போது ’தலை’க்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடுமல்லவா?


திங்கள், மே 11, 2015

பாராட்டும்,வேண்டுகோளும்

கிட்டத்தட்ட170 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க சர்க்கரை ஆலையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை.உண்மையில் இன்றளவும் சிறந்த நிர்வாகத்தை கொண்டுள்ளது.

 விவசாயிகளுக்கு கரும்பு பயிருக்கு மட்டுமே ஒரு நிலையான விலை உள்ளது.மத்திய அரசு கரும்பிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் அறிவிக்கும். மேலும் அத்துடன் சேர்த்து சில மாநிலங்கள்  கூடுதல் விலையை அறிவிக்கும். இவ்வருடத்திற்கு இதுதான் கரும்புக்கான விலை என்பது முன்னமேயே விவசாயிகளுக்கு கரும்பு ஆலைக்கு ஏற்றவாறு தெரிந்துவிடும்.கரும்பு விவசாயிகளுக்கு இதுதான் ஒரு சிறப்பான விஷயம்.

இந்தியாவில்  பல்வேறு மாநிலங்களில் சுமார் 17000 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

 இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையை பொறுத்தவரை வெட்டு உத்தரவில்  சிறு, சிறு சிரமங்கள் இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை சப்ளை செய்த கரும்பிற்கு உரிய விலையை சுமார் 15- தினங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடும்.இதுதான் இந்த ஆலையின் நீண்ட கால சிறப்பம்சம்.இதன் காரணமாகவே விவசாயிகள் மற்ற பயிரை விட கரும்பு பயிரிட விருப்பம் கொண்டிருப்பார்கள்.சுற்று வட்டார  விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஆலை உறுதுணையாக உள்ளது என்றால் அது மிக்க பொருத்தமானதே.

ஆனால் இந்த சிறப்பான விஷயத்தில் ஒரு கரும் புள்ளியாக இரு ஆண்டுகளாக மத்திய அரசு கரும்பிற்கு அறிவித்த விலையை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.மாநில அரசு அறிவித்த கூடுதல் விலையை வழங்க கோரி விவசாயிகள் ,அரசியல் கட்சிகள்,பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பல்வேறு காரணங்களை காட்டி  இன்னும் வழங்காமல் உள்ளது.இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்கள்.

பாரம்பரியமும் பெருமையும்  மிக்க சர்க்கரை ஆலையான இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை இதுநாள் வரை கொண்டுள்ள பெருமைக்கு தக்கவாறு
சிரமங்கள் இருந்தாலும் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை வழங்கி விவசாயிகள் இந்த ஆலையின் மீது நீண்ட காலமாக கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.



விடுதலை, விடுதலை, விடுதலை

கர்னாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஏற்கெனவே கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டது.ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.மீண்டும் தமிழக முதல்வராகிரார்  ஜெயலலிதா.

வியாழன், மே 07, 2015

ஆன் - லைன் ஷாப்பிங் -அனுபவம். அமேசானுக்கு பாராட்டு

ஆன் -லைன் ஷாப்பிங் -பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ,ஆர்வமுடன் சில மாதங்களாக இதில் சில பொருட்கள் வாங்கியதில் எனக்கு கிட்டிய அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

நான் எனக்கு முதலில் நகரங்களை தவிர்த்து கிராமத்திற்கு பொருட்கள் ஆன் லைன் மூலம் பெறமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது.அமேசான்,  ஸ்னாப்டீல்,   ரிடிஃப், இன்பிபீம்,  பேஷனோரா, ஜெ -பியர்ல்ஸ்,போன்ற ஷாப்பிங் தளங்களில் பெரும்பாலும் அஞ்சல் துறையின் விரைவு தபால் வசதி மூலம்  இத்தகைய வசதி கிட்டியது.

குறைந்த விலையுள்ள பொருட்களை எந்த பிரச்னையும் இன்றி வாங்க முடிந்தது.இணையத்தள பண பரிமாற்றத்தின் மூலம்தான் இத்தளங்களில் பொருட்கள் வாங்கினேன்.

இவற்றில் எனக்கு  அமேசான் தளத்தின் சேவை மிக சிறப்பாக இருந்தது. கிராமத்தில் இருந்தாலும் கிட்டத்தட்ட 4- நாட்களுக்குள் பொருட்கள் டெலிவரி கிடைத்தன.பெரிய அளவிளான பொருட்களை கிராமத்தில் பெற வசதி இல்லை என்ற குறையை தவிர,  இத் தளத்தில் பொருட்கள் ஆர்டர் செய்ய ஏதாவது பிரச்னை ஏற்படினும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மூலம் ஆன் லைன் மூலமே உதவிகள் கிட்டியது
.பணபரிமாற்றத்தின் போது ஏற்பட்ட பிரச்னையின் போதும்,ஆர்டரை கேன்சல் செய்தபோதும் என் வங்கிக்கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் திரும்ப கிடைத்தது.அமேசானுக்கு எனது பாராட்டுக்கள்.

வியாழன், ஏப்ரல் 30, 2015

மூட்டைப்பூச்சியா - கொளுத்து வீட்டை

விவசாயிகளுக்கு வங்கிகளில் பல்வகை கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் முக்கியமானவை நகைக்கடன், மற்றும் பயிர்க்கடன்.

இவற்றில் முதலில் 9% சத வட்டிவீதமாக நிர்ணயிக்கப்பட்டு பின் 2%சதம் அரசால் மானியமாகவும் பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்காக கடனை திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3% சத வட்டி அரசால் மானியமாக வழங்கப்பட்டு இறுதியில் 4% சத வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுவருகிறது.

பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். வங்கிகள் தங்களுக்கு நிர்ணயிக்கபட்ட விவசாய கடன் இலக்கை அடைய பெரும்பாலும் நகைகடன் கொடுத்து அந்த இலக்கை அடையவும் , மேலும் விவசாயிகள் தவிர மற்றவர்களுக்கும் இந்தவகையில் கடன் அளித்து இலக்கை அடைவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.மேலும் பல காரணங்களை காட்டி அரசாங்கம் அளிக்கும் வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்காமல் எமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இதனால் உண்மையான விவசாயிகளுக்கு கடனும், அரசின் பயனும் கிடைப்பதில்லை.

உண்மையான விவசாயிகளுக்கு தேவையான  கடன் தொகை,அரசாங்கம் அளிக்கும் வட்டிச்சலுகை விவசாயிகளுக்கு சரியாக சென்று சேர தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு ரிசர்வ்வங்கி விவசாயிகளுக்கான கடன் வட்டியை 11% ஆக உயர்த்தி பிரச்சினையை முடிக்க நடவடிக்கை எடுப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும்  (--------)செயலாக உள்ளது.

சனி, ஏப்ரல் 25, 2015

விவசாயிகளின் மதிப்பு

இன்று நாளிதழில் ஒரே பக்கத்தில் வெளியான இரு செய்திகளை பார்ப்போம்
.
செய்தி 1.கால்நடைகள் கடத்தல்-சுப்ரீம் கோர்ட் கவலை.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் கால்நடைகள் வங்கதேசத்திற்கு கடத்தபடுகின்றன.உணவு தண்ணீர் கொடுக்காமல் பல கி.மீ தூரம் நடத்திசெல்லப்படுகிறது. அதை தடுக்கவேண்டும்.இதனால் இந்தியாவில் கால்நடை எண்ணிக்கை குறையும். குழந்தைகளுக்கு பால் கிடைக்காது எனவே இதை தடுக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது.

செய்தி 2. மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை.

மத்திய அமைச்சர் ராஜ்யசபாவில் பேசும் போது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும் இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் எனவும் விவசாயிகள் தொடர்பான விவகாரம் மாநில அரசுகள் சம்பந்தபட்டது என்றும் அந்த அரசுகள் வழங்கும் இழப்பீட்டில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


அரசோ,அதிகார வர்க்கமோ ,நீதிமன்றங்களோ கூட விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. கால்நடைகளுக்கு கிடைக்கும் நீதி கூட விவசாயிகளுக்கு கிடையாது.என்ன செய்வது தற்கொலையை தவிர?

வியாழன், ஏப்ரல் 23, 2015

இதுதான் எனது இன்றைய இந்தியா

நேற்று  இந்திய தலைநகர் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மத்திய அரசின் நிலம் கையகபடுத்தும் சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கற்ற விவசாயி ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மிக்க அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுதான் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வேதனையான நிலைமை.

உண்மையான காரணத்தை ஆராயாது இதை எப்படி தங்களுக்கு சாதக பாதகமாக பயன்படுத்திகொள்வது என்பதுதான் அரசியல் கட்சிகளின் தற்போதய சிந்தனையாக உள்ளது.
உண்மையில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மோடி அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லைஎன்பதுதான்அப்பட்டமானஉண்மை.
ஆனால்விவசாயிகளுக்கு எதிராக நிலம் எடுப்பு சட்டம்,விவசாய கடனுக்கான வட்டியை இருமடங்கு ஆக்குவது,போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல்களின் ஈடுபட்டு வருகிறது வேதனையாக உள்ளது.

திங்கள், ஏப்ரல் 20, 2015

பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

மாண்புமிகு பாரத பிரதமருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

  இந்திய நாடு வளர்ச்சியடைய பாடுபடும் பிரதமருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள். நாடு வளர்ச்சியடைய தொழில்வளம் பெருக வேண்டியது மிக்க அவசியம். இதற்கு தேவையான நிலம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரம் ஒரு விவசாய நாட்டில் விவசாயதொழிலும் பெருகவேண்டியது தேவையல்லவா?

 நம் நாட்டில் கல்வி கற்க தேவையான பள்ளிக்கூடம், மருத்துவமனை  போன்ற பொதுபயன்பாட்டிற்கு தேவையான நிலத்தை அவ்வூரில் உள்ள பெரியோர்கள் மனம் உகந்து  தன்னிடம் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை இலவசமாக அரசுக்கு அளிக்கும் மனோபாவம் கொண்டிருந்தது பெருமைக்குரியது.

 அத்தகைய பெருமைக்குரியவர்களாகிய விவசாய சமுதாயத்திடம் இருந்து தொழில் துவக்க நிலத்தை அதிரடி அவசர சட்டம் போட்டாவது பிடுங்க நினைப்பதுதான் வேதனை தருகிறது.

தொழில்வளம்பெருகினால்பலருக்குவேலைவாய்ப்புகிடைக்கும்,பொருளாதாரம் வளரும் என்பது அனைவரும் அறிந்ததே.
விவசாயம் வளர வழி உள்ளதா என்பதே என் கேள்வி
.உங்களிடம் உள்ள அதிகார பலத்தின் மூலம் அச் சட்டம் நிறைவேறுமாயினும் கவலையில்லை.ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள் அப்படி கையகபடுத்தும் நிலத்தில் 50% விழுக்காடு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைக்குதான் ஒதுக்கப்படவேண்டும் என்பதே என் அன்பு வேண்டுகோள்.

புதிய அவதாரம்

விவசாயிகளின் ஆபத்பாந்தவராக ராகுல்காந்தி புதிய அவதாரம் எடுத்து நிலம் கையகபடுத்தும் மசோதாவை எதிர்த்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில்பேசும்போது இன்றைய பி. ஜே. பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கட்கரி விவசாயிகளிடம் அரசையும் கடவுளையும் நம்பவேண்டாம் என கூறியது.இன்றைய ஆட்சியில் விவசாய வளர்ச்சி குறைந்தது,   பிரதமர் மோடி விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிவருவது,  விவசாய விளைபொருளுக்கு விலையை அதிகபடுத்தி வழங்காதது,  விவசாயிகளுக்கு கடன் தொகை வெறும் 5% மட்டும்  பட்ஜெட்டில் கூடுதலாக்கியது,  மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது தொழிலதிபர்களுக்கு ஆதரவானது  என்பது போன்ற பல விஷயங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இன்றைய அரசை எதிர்த்து அவர் விவசாயிகளுக்காக பேசியது அனைத்தும் மிக்க பொருத்தமானதே.ஆனால் காலம் கடந்த ஞானோதயத்தால் பயனில்லையே ராகுல்ஜி.உங்களின் பிரதமர் மன்மோகன் விவசாயிகளை வேறு வேலை பார்த்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது இதையெல்லாம் நீங்கள் பேசியிருந்தால் ஏதாவது பயன் கிட்டியிருக்கும்.

நிலம் கையகபடுத்தும் மசோதாவை எப்படியாவது நிறைவேற்றத்துடிப்பதின் மூலம் பிரதமர்மோடி அவரை அறியாமலேயே எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு அருமையான வழியை உருவாக்கிதந்துவிட்டார்.
இன்றைக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் ராகுலின் காங்கிரஸ் ஆட்சியில்தான் நிலம் கையகபடுத்தும் மசோதாவே கொண்டுவரப்பட்டது என்பதை விவசாயிகள் மறந்துவிட மாட்டார்கள்.

விவசாயிகளிடம் உள்ள ஓட்டு வங்கிதான் பறிகொடுத்துவிட்ட அரசை கைப்பற்ற ஒரே ஆயுதம் என்பதுதான் நீண்ட விடுமுறையில் ராகுலுக்கு கிட்டிய ஞானோதயம் என்பதே என் கருத்து.
இந்த ஞானோதயம் மோடிக்கு கிட்டுமா என்பதே என் கேள்வி?

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

பணக்காரர்களிடம் மன்றாடல் - ஏழைகளிடம் அதிரடி-- மோடிபாணி

இது நியாயமா ,மோடி ஜீ -
வசதி படைத்த பணக்காரர்களிடம் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத்தருமாறு மன்றாடி கெஞ்சும் நீங்கள் ஏழை விவசாயிகளிடம் உள்ள நிலத்தை பிடுங்குவதில் மட்டும் அதிரடியாக செயல்படுவது என்ன நியாயம்?

 நிலம் கையகபடுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு நன்மையானது என மேடை தோறும் பேசும் நீங்கள் என்ன நன்மை என எதையுமே தெரிவிக்காமல் வெறுமனே கூப்பாடு  போடுவதால் பயனில்லையே.

உண்மையில் எனக்கு நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும் என்றால் எனக்கு சொந்தமான நிலத்தை தாராளமாக அரசுக்கு அளிக்க தயாராகவே உள்ளேன்.எடுத்து கொள்ளுங்களேன்.

இந்த ஒரு விஷயமே போதுமே மோடி ஜீ   விவசாயத்தை அறியாது
’ டீ’  வியாபாரம் செய்த அனுபவம் கொண்ட  நீங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்தான் என்பதற்கு.

சனி, ஏப்ரல் 11, 2015

நிதின் கட்கரி-செய்தி

சமீபத்தில் ஒருசெய்தி-
 விவசாயிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டதில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசும்போது  விவசாயிகள் அரசையோ , கடவுளையோ நம்பும் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என பேசியதாக செய்தி.

 கட்கரி-ஜிக்கு ஒரு அன்பான எச்சரிக்கை.விவசாயிகள் அரசாங்கத்தை  நம்பவேண்டாம் என நீங்கள் குறிப்பிட்டது மிக்க பொருத்தம் தான்.ஏனெனில் ’ஜெய்கிசான்’என தேர்தல் நேரத்தில் மேடை தோறும் முழங்கி விவசாயிகளின் ஓட்டை பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள் விவசாயிகள் வலி என்ன? பிரச்னைகள் என்ன என ஆராய நேரமில்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து கொண்டுள்ள பிரதமரை பார்த்தும்,  விவசாய விளைபொருளுக்கு 50% கூடுதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் அவ்வாறு அளிக்க இயலாது என சொல்லி விவசாயிகளை ஏமாற்றியும்,யாருக்கோ அடிபணிந்து எப்பாடு பட்டாவது நிலம்கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற துடிக்கும்  உங்களை பற்றி மிக்க பொருத்தமாய்தான் தெரிவித்துள்ளீர்கள் கட்கரிஜி.

ஆனால் உங்களோடு சேர்ந்து கடவுளையும் நம்பவேண்டாம் என தெரிவித்து கடவுளை உங்களோடு ஒப்பிட்டுக்கொண்டதுதான் மிக்க வேதனையாய் உள்ளது .கடவுளாலும் விவசாயிகளை காப்பாற்றமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா கட்கரிஜி.உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களை நினைத்து வேதனையாய் உள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து வர உள்ள தேர்தலின் போது வாக்காளர்களான எங்களையும், கடவுளையும் நம்பும் மன நிலையை மாற்றிக்கொண்டு ஏற்படபோகும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இப்பொழுதிருந்தே வளர்த்துகொள்ளுங்கள் கட்கரிஜி.

வியாழன், ஜனவரி 22, 2015

சேவை வரி -மீண்டும் ஒரு பூதம்.

ஏற்கெனவே சேவை வரி பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பின் என்ன காரணமோ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டிற்க்கு அந்த சேவை வரி விலக்கிகொள்ளபட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் இரு மடங்காக சேவை வரி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

  ஏழைகள், இயலாதோர், போன்றவர்களுக்கு அவர்களின் துன்பங்களை, கஷ்டங்களை  தன்னால் முடிந்தவரை குறைப்பதற்க்கான செயலை செய்வதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.அவ்வாறு செய்யாமல் அதை அதிகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது முட்டாள்தனமானது.

 நம்பிக்கைமிக்க ஒரு மத்திய அரசாங்கத்தின் அங்கமாக கிராமங்களில் கூட செயல்பட்டுவரும் அஞ்சலகத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாயை கட்டி வயிற்றை கட்டி தான் சேமிக்கும் மாதம் 50 - 100  ரூபாய்க்கும்ஏழைகளிடம் 2% வரி விதித்துதான் உங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்றால் வெட்ககேடான விஷயம் வேறேதுமில்லை மோடிஜி.

ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-4

இந்த வருட மார்கழி பஜனையில் கலந்துகொள்ளும் சிறுவர் சிறுமியர்கள் காலை 4.30 மணிக்கு பஜனை ஆரம்பம் என்றாலும் அதிகாலை 3.30 மணிக்கே (சில நாட்களில் அதிகாலை 3.00 மணிக்கே )கூட ஜால்ராவை கைப்பற்றிவிட  போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொள்வது ரசிக்கவைக்கும்.

இந்த வருட இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை தமிழ்மணத்தோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.





மாதங்களில் நான் ”மார்கழி”-3

அதிகாலை எழுந்து சிறுவர் சிறுமியரோடு அவர்களை ஒருங்கினைத்து மாடவீதி வழியே பக்தியுடன் பஜனை பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்று வந்து கொண்டிருந்த ஓரிரு பெரியோர்களில் மிக முக்கியமான பெரியவர் சில மாதங்களுக்கு முன் இறைவன் திருவடி அடைந்துவிட்டதின் காரணமாகவே அவ்வாறு கேட்டனர்.

  இவ்வளவு நாளாக  நடைபெறும் இந்த ஒரு எளிய பக்தி பஜன் நடைபெறுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.ஏனெனில் இன்றைய உலக  நாகரீக மாற்றங்களின் தாக்கங்கள் கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து 70 வயதான அந்த பெரியவரை போன்று தன்னலமற்று பக்திவெள்ளத்தில் இணைத்துகொள்ள விரும்பும் இளைஞர்கள்  யாரும் இன்று தயாராக இல்லை என்பதே உண்மை.என்றாலும் அவரின் வயதையொத்த பெரியோர்கள் சிலர் தங்கள் உடல்நலனையும் கருதாது கலந்து கொண்டு இந்த மார்கழி பஜன் என்கிற எளிய பக்திமார்க்கம் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்தது ”கண்ணனின்” திருவருள் அன்றி வேறில்லை.

மாதங்களில் நான் ”மார்கழி”-2

அன்றைய பஜனையில் மிருதங்கம் ,ஹார்மோனியம், சிப்லாகட்டை,ஜால்ரா போன்ற  இசை கருவிகள் இசைக்கப்பட்டு  இனிமையாக இருந்தது

.சில வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டுவந்த இக்கருவிகள் கால மாற்றங்களால் பயன்படுத்தமுடியாமல் வீணாகி மறைந்து விட்டதுபோல் அதனை இசைக்க தெரிந்த   பல பெரியோர்கள் தற்போது  மறைந்து விட்டாலும் ,எஞ்சிய ஜால்ராவை வைத்து மட்டும் கிராமத்து இளம் சிறுவர்கள் இன்றும் அதிகாலை 3-4 மணிக்கே எழுந்து இந்த இனிய பக்தி பரவசத்தில் உற்சாகம் கொண்டு கலந்து கொண்டு வருவது ஆச்சரியமானதே.

இந்த ஆண்டும் இந்த மார்கழி பஜனை ஊர்வலம் உண்டா என மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பே சிறுவர்கள் அதீத உற்சாகத்துடன் என்னிடம் கேட்டபோது  ‘கண்ணன்” திரு உள்ளம்  எதுவோ அதுவே நடக்கும் என மனதிற்க்குள் நினைத்து கொண்டு ஏதும் சொல்லாமலே விட்டுவிட்டேன்.
சிறுவர்கள் அவ்வாறு கேட்டதற்கு காரணம்?

தொடரும்.

மாதங்களில் நான் ”மார்கழி”-1

மார்கழி மாத அதிகாலைபொழுது அளிக்கும் இனிமையும், உற்சாகமும் என்றென்றும் மறக்கமுடியாதவை. எங்கள் கிராமத்தில் அந்த அதிகாலைபொழுதை இனிய எளிய பஜனையுடன் அனுபவிக்க ஆர்வமுடன் பனிவிழும் அதிகாலையில் எழுந்து சிறு வயதான எங்களுக்கு குளிப்பதற்க்கு  வென்னீர் வைத்து அன்புடன் எழுப்பி கோயிலுக்கு செல்ல தயாராக்கி விட்ட எங்கள் தாயார் மறைந்து விட்டாலும் இன்றும்  அந்த இனிய நினைவுகள் மறக்க முடியாதவையே.
கிட்டதட்ட 75 ஆண்டுகளாக இந்த  எளிய பஜனை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.உற்சாகம் துள்ளும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பல பெரியோர்களும் தங்கள் வயது மறந்து ஆடிப்பாடிஉண்மையான பக்தி பரவசத்தில் மெய்மறந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாகவே உள்ளது.

ஆனால் அத்தகைய பல பெரியோர்கள் மறைந்து விட்டதனால் அத்தகைய உற்சாகபக்தி பரவசம் மெல்ல மெல்ல குறைந்து வருவதும் இயற்கையே. அத்தகைய சூழலில் இந்த ஆண்டும் பாரம்பரியம் மிக்க இத்தகைய பக்தி நிகழ்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியும் இருந்தது.

தொடரும்