திங்கள், மே 11, 2015

பாராட்டும்,வேண்டுகோளும்

கிட்டத்தட்ட170 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க சர்க்கரை ஆலையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை.உண்மையில் இன்றளவும் சிறந்த நிர்வாகத்தை கொண்டுள்ளது.

 விவசாயிகளுக்கு கரும்பு பயிருக்கு மட்டுமே ஒரு நிலையான விலை உள்ளது.மத்திய அரசு கரும்பிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் அறிவிக்கும். மேலும் அத்துடன் சேர்த்து சில மாநிலங்கள்  கூடுதல் விலையை அறிவிக்கும். இவ்வருடத்திற்கு இதுதான் கரும்புக்கான விலை என்பது முன்னமேயே விவசாயிகளுக்கு கரும்பு ஆலைக்கு ஏற்றவாறு தெரிந்துவிடும்.கரும்பு விவசாயிகளுக்கு இதுதான் ஒரு சிறப்பான விஷயம்.

இந்தியாவில்  பல்வேறு மாநிலங்களில் சுமார் 17000 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

 இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையை பொறுத்தவரை வெட்டு உத்தரவில்  சிறு, சிறு சிரமங்கள் இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை சப்ளை செய்த கரும்பிற்கு உரிய விலையை சுமார் 15- தினங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடும்.இதுதான் இந்த ஆலையின் நீண்ட கால சிறப்பம்சம்.இதன் காரணமாகவே விவசாயிகள் மற்ற பயிரை விட கரும்பு பயிரிட விருப்பம் கொண்டிருப்பார்கள்.சுற்று வட்டார  விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஆலை உறுதுணையாக உள்ளது என்றால் அது மிக்க பொருத்தமானதே.

ஆனால் இந்த சிறப்பான விஷயத்தில் ஒரு கரும் புள்ளியாக இரு ஆண்டுகளாக மத்திய அரசு கரும்பிற்கு அறிவித்த விலையை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.மாநில அரசு அறிவித்த கூடுதல் விலையை வழங்க கோரி விவசாயிகள் ,அரசியல் கட்சிகள்,பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பல்வேறு காரணங்களை காட்டி  இன்னும் வழங்காமல் உள்ளது.இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்கள்.

பாரம்பரியமும் பெருமையும்  மிக்க சர்க்கரை ஆலையான இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை இதுநாள் வரை கொண்டுள்ள பெருமைக்கு தக்கவாறு
சிரமங்கள் இருந்தாலும் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை வழங்கி விவசாயிகள் இந்த ஆலையின் மீது நீண்ட காலமாக கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.



கருத்துகள் இல்லை: